தமிழ்நாடு அரசு, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சுயதொழில் தொடங்க வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பீட்டின் உச்ச வரம்பு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தி ஆணைகள் பிறப்பித்துள்ளது. இதற்கான மானியம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திலிருந்து ரூ.3லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 45 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு (எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் திருநங்கைகள்) 45 வயதிலிருந்து 55 வயதாகவும் உயர்த்தி ஆணைகள் பிறப்பித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்கி விற்கலாம். தொழிற்சாலை உதிரிபாகங்கள் கடை, குறிப்பாக மளிகை கடை, பெட்டிக் கடை,பேன்சி ஸ்டோர், புத்தக நிலையங்கள் தொடங்கு பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். இந்த திட்டத்தின் கீழ் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற வலைதள முகவரியில் ,கல்விச் சான்று, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று,ஜாதி சான்று, விலைப்புள்ளி, திட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ராணிப்பேட்டை -632402 முகவரியில் நேரிலோ அல்லது 04172-270111 /270222 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.